பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருதான செவாலியர் விருது பெற்று திருமதி சிவயோகநாயகி இராமநாதன் அவர்கள் நமது மண்ணுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்.
பிரஞ்சு மொழியினை இலங்கையில் கற்பித்து அம் மொழியினையும் பிரான்ஸ் நாட்டு கலாசார பங்களிப்பினையும் இலங்கையில் இவர் பல ஆண்டுகளாக பரப்பியதோடு இவர் கல்வித் துறைக்கு ஆற்றிய சேவையை கௌரவிக்குமுகமாக பிரான்ஸ் நாட்டுக் கல்வி அமைச்சினால் (2009) ஆண்டு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
திருமதி சிவயோகநாயகி வரலாற்று சிறப்பு மிக்க பொலிகண்டி கந்தவன ஆலயத்தை பரம்பரையாக பரிபாளித்துவரும் ஆதீன கர்த்தாக்களின் குடும்பத்தில் சைவப் பெரியார் திக்கம் செல்லையாப்பிள்ளைக்கும் இராயமுத்து அம்மையாருக்கும் கடைசி மகளாக 1937 இல் பிறந்தார்.
சிவயோக சுவாமிகளால் இவருக்கு சிவயோகநாயகி எனும் பெயர் சூட்டப்பட்டது. உயரிய விருதைப் பெற்று ஈழத் தமிழர்களுக்கு பெருமை தேடித்தந்துள்ள இவர் பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று தமிழ்நாடு சென்னை பல்கலைக் கழகத்தில் மனைப் பொருளியலை பிரதான படமாகக் கொண்டு B .Sc பட்டம்பெற்று இலங்கை திரும்பினர்.
பலாலிஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக கடமையாற்றிய பொழுது இவர் திறமை அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் புலமைப் பரிசினைப் பெற்று பிரான்ஸ் சென்று M .Sc பட்டம் பெற்று பிரெஞ்சு மொழியினையும் கற்றார்.
அந்த மொழியில் பெற்ற பாண்டித்தியத்துடன் இலங்கை வந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக கடமையாற்றினார்.
1979 ஆம் ஆண்டு பிரான்ஸ் தூதரகத்தின் வேண்டுதலுடன் யாழ் பல்கலைக் கழகத்தில் பிரெஞ்சு விரிவுரையாளராகக் கடமையாற்றினார். அதேவேளை யாழ் கல்வி வலயம் II இல் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்றார் பிரெஞ்சு மொழியை யாழ்ப்பாணம் Alliance Francaise நிறுவனத்திலும் இவர் கற்பித்து வந்தார். பிரெஞ்சு மொழியை 25 வருடங்களாக கற்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் அனைவரும் பெருமை படத்தக்க விதத்தில் செவாலியர் விருது இவருக்கு கிடைத்திருக்கின்றது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் நடிப்புத்துறைக்காக இவ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் திருமதி சிவயோகநாயகி இராமநாதன் அவர்களை பாராட்டிக் கௌரவிப்பதில் ஈழத்தமிழ்மக்கள் பெருமையடைகின்றனர்.
நன்றி-பொதிகை இணையம்