சமூக ஊடகங்கள் சாபமா, வரமா?படித்துப்பாருங்களேன்!

சமூக ஊடகங்கள் சாபமா, வரமா?படித்துப்பாருங்களேன்!

ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவும் தகவல்களை பரிமாறவும் பயன்படுத்திய ‘பறை’ ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல், தொலைபேசி வழி என கற்காலம் தொடங்கி கணினி காலமான இன்று வரை சமூக ஊடகத்தின் பரிணாமவளர்ச்சி பல கட்டங்களை கடந்து அசாத்திய முன்னேற்றம் பெற்றுள்ளது.

அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க இயலாது வாழ்வின் அங்கமாகி விட்டன தகவல் ஊடகங்கள். இந்த நிலையில் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் தாக்கமும் வரமா,சாபமா என்ற கேள்வி அனுதினமும் பேசுபொருளாகிவிட்டது.

உலகத்தின் எந்த மூலையில் உள்ள மனிதனும் தன்னுடைய கருத்துகளை பரிமாறிக் கொள்ள இந்த சமூக ஊடகங்கள் ஏதுவாகின்றன. அண்டை வீட்டு அளவிலும், தெரு நட்புகள் அளவிலும், பாடசாலை மற்றும் கல்லூரி, பணியிடங்கள் அளவிலும் மட்டுமே இருந்து வந்த நம் நட்பு வட்டாரங்கள் இன்று இந்த சமூக ஊடகங்களின் வாயிலாக பரந்து விரிந்து உலகம் முழுவதும் தன் நட்பின் பாசவலைகளை வீசியிருக்கின்றது. உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், நமது வினாக்களுக்கும் விடையளிக்கும் அறிவு களஞ்சியமாகவும் திகழ்வது சமூக ஊடகங்கள் ஆகும்.

பேஸ்புக், டுவிட்டர், இன்டர்கிரம், வாட்ஸ்அப் போன்ற முன்னோடி சமூக ஊடக தளங்களின் மூலமாக இளைஞர்களின் சிறப்பான பல ஆக்கங்களுக்கு அங்கீகாரம் மிக எளிதாக கிடைக்கின்றது. இந்த தளங்களின் மூலம் இளைஞர்களின் உள்ளார்ந்த திறமைகள் வெளிக்கொணரப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உலகளாவிய நட்பு வட்டாரங்களால் இடப்படும் குறியீடுகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவற்றால் ஊக்கம் அளிக்கப்படுகிறது.

பல தவறான முன்னுதாரணங்களையும் தாண்டி இன்று ஒரு தகவல், தெரிந்து கொள்வோம் போன்ற சமூக ஊடகதள பக்கங்கள் சிறப்பான சேவையாற்றி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனினும் இன்றைய சமூகத்தினர் உலகத்தின் அசைவுகளை விரல் நுனியில் அசைபோட, சமூக ஊடக தளங்களின் வீரியமிக்க பயன்பாடு பெரிதும் உதவி புரிகின்றது.

உலக மாற்றத்திற்கேற்ப மாறிவரும் மனிதர்கள் மத்தியில் தொழில்நுட்பத்தின் தாக்கம் புதிய பரிணாமத்தை தந்துள்ளதோடு அவை சார்ந்த சாதக, பாதக விடயங்களையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றன. கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் இதர விடயங்களின் தளமாக சமூக ஊடகங்கள் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்து. இவற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் சுயபாதுகாப்பையும் சமூக இருப்பபையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

‘காலம் பொன் போன்றது’ என்பார்கள். அவ்வாறு விலைமதிக்க முடியாத நேரங்களை சமூக வலைத்தளங்களில் கணக்கின்றி செலவழிக்கும் நம் இளைய சமுதாயம் மைதான விளையாட்டுக்களையும், இயற்கையை ரசிக்கும் தன்மையையும் அடியோடு மறந்து விட்டது.

எட்டு வயதுக்கும் குறைவான நம் எதிர்கால தூண்கள் கூட தினமும் இந்த சமூக வலைத்தளங்களில் வீழ்ந்து கிடப்பது கொடுமை. சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் மனதளவில் அடிமைகளாக சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் மனநிலை மற்றும் உடல் கூறுகளின் பாதிப்புகள் அதிகமாவதாக மனோதத்துவ நிபுணர்களும், நரம்பியல் வல்லுனர்களும் ஒரு அதிர்ச்சி தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

அதாவது சமூக ஊடகங்களில் தரம் குறைந்த, முதிர்ச்சியற்ற அவசர விமர்சனங்கள், கருத்துப் பதிவுகள் அமெரிக்கா தொடங்கி உள்நாடு வரை வீசப்படுகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மூலைமுடுக்குகளை ஊடுருவி இருப்பதால் இதன் தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது. தங்களை அடையாளப்படுத்துவதற்காக ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களின் அங்கத்தவர்களாக இருப்பதற்கே விரும்புகின்றனர். ஆண், பெண் அடிப்படையிலும் வயது அடிப்படையிலும் தாராளமாக சமூக வலையத்தளங்களை பாவிப்பது அதன் வேகமான ஆதிக்கத்தை வெளிக்காட்டுகின்றது.

சமூக ஊடகங்கள் மனிதரின் நேரத்தை களவாடியது ஒருபுறம் என்றால் அதை விட மக்களிடையே இருந்து உணர்வுபூர்வமான பிணைப்பை கொன்று வருகின்றன என்பது வேதனைக்குரிய விடயமாகும். ‘தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்கா பக்கத்து வீடானது. பக்கத்து வீடு அமெரிக்காவானது’ என்றோ எங்கோ படித்த கவிதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. தேடித் தேடி வாழ்த்து அட்டைகள் வாங்கி, நேரில் சென்று, உளமார வாழ்த்தி அன்பைப் பகிர்ந்து கொண்ட தருணங்கள் மாறி, தன் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கூட சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை ஜீவனின்றி பகிர்கின்றோம். இறந்த நண்பனுக்கு இரங்கல் செய்தி பதிவிட்டு அடுத்த வேலையை நோக்கிச் செல்லும் அவலம் அரங்கேறி வருகின்றது. அந்த இறந்த நண்பரின் வீட்டிற்கு செல்லவோ, அவரின் தாய், தந்தைக்கு ஆறுதல் கூறி தேற்றவோ எண்ணம் எழாத அளவிற்கு சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நீள்கிறது.

100 வருட சினிமா வரலாற்றின் தலை எழுத்தையும் மாற்றி எழுதிக் கொண்டிருக்கின்றது சமூக ஊடகங்களின் வளர்ச்சி. வாய்ப்புத் தேடி அலைகின்ற திறமையுள்ள கூட்டம் தங்கள் குறும்படப் படைப்புகளை யூடியூபில் பதிவேற்றி நேரடியாக மக்கள் மன்றத்தில் இடம்பிடிக்கிறது.

எட்ட இருப்பினும் முகத்தோடு முகம் பார்த்து பேசும் அதிசயங்களை இவை தருகின்றன. உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நண்பர்கள், உறவுகளுடன் தொடர்பில் இருக்கவும் புத்தகம் கையில் எடுக்காத இளைஞர்களும் நொடிக்கு நொடி உலகின் அசைவுகளை விளங்கிக் கொள்ள முடிகிறது. இதன் பயன்கள் எல்லையற்றவை.

எது எவ்வாறு இருந்தபோதிலும் சமூக ஊடகத்தளங்களினால் தீமைகள் இருந்தாலும் மறுக்க முடியாத பல நன்மைளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக சகல தரப்பினர் மத்தியிலும் இதன் ஆதிக்கம் விரைவாக பரவி வருகின்றது. ஆகவே முறையான விதத்தில் கையாள்வதின் ஊடாக சிறந்த பலனைப் பெற முடியும். சமூக ஊடகங்களின் தீமையை மட்டுமே கண்டு ஒதுங்கக் கூடாது. எந்த ஒரு புதுமையிலும் நாணயத்தின் இருபக்கம் போல நன்மை, தீமை இரண்டும் சேர்ந்தே இருக்கும்.

சமூக வலைத்தளங்கள் அவரவர் பயன்படுத்தும் விதத்தினைப் பொறுத்து அதன் ஆதிக்க விளைவுகளை கண்டு கொள்ள முடியும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux