யாழ்-தீவக பிரதான வீதியில் கடந்த 10.03.2017 அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான -கனடாவில் வசிக்கும் தீவகம் புளியங்கூடலைச் சேர்ந்த,இரண்டு பிள்ளைகளின் தாயான அமரர் திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் அவர் பிறந்த இடமான புளியங்கூடலில் கடந்த 13.03.2017 திங்கட்கிழமை அன்று காலை நடைபெற்றது.
அன்னாரின் கணவர் திரு விஜயரூபன் அவர்கள் கனடாவிலிருந்து அழைத்து வரப்பட்டதாகவும்-தன் மனைவியின் திடீர் இழப்பை தாங்க முடியாமல் பல தடவைகள் மயங்கி வீழ்ந்ததாகவும் மேலும் தெரிய வருகின்றது.
அன்னாரின் இறுதி நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள்-உறவினர்கள்-ஊரவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டதாக மேலும் அறிய முடிகின்றது.
தீவகம் புளியங்கூடலை சொந்த இடமாகக் கொண்டவரும்- தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் தனது தாயாரை சுகயீனம் காரணமாக பார்வையிடுவதற்காக -தனது இரு பிள்ளைகளுடன் கனடாவிலிருந்து புளியங்கூடலுக்கு சென்றிருந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து,வியாழக்கிழமை மாலை 7.20 மணியளவில் தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் புளியங்கூடலைநோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக மண்கும்பான் எல்லைக்குட்பட்ட தீவக பிரதான வீதியில் மோட்டார் சையிக்கிள், கார், உழவு இயந்திரம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் மோட்டார் சையிக்கிளை செலுத்திய விஜயரூபனின் தந்தையான திரு வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களும் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
விபத்தில் பலியாகிய திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள்- 1991இல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று வேம்படியில் கல்வி பயின்று பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டம் பெற்று லண்டனில் உயர் கல்வி கற்று பின்னர் கனடா சென்று குடும்பத்துடன் குடியேறி வாழ்ந்து வந்தவர் என்று மேலும் அறியமுடிகின்றது.
தீவக பிரதான வீதியில்,சில வார இடைவெளியில் இடம்பெற்ற,இரண்டாவது கோர விபத்து இதுவாகும்.