யாழ் தீவகம் வேலணையில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று 18.02.2016 வியாழக்கிழமை காலை வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு மாவை.சேனாதிராசா அவர்களின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறுவர் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், அங்கஜன் ஆகியோருடன் வைத்திய அதிகாரி, வலயக்கல்விப்பணிப்பாளர், வீதி அபிவிருத்தித்திணைக்களம், பிரதேச சபை, மற்றும் கிராமிய அமைப்புக்களின் தலைவர்கள், கால்நடை அபிவிருத்தித்திணைக்கள பிரதிநிதி மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வடிகாலமைப்பு, கால்நடை வளர்ப்பு சம்பந்தமாக பிரேரணைகள் மக்களால் முன்வைக்கப்பட்டது.
தீவக மக்களின் முக்கிய வாழ்வாதாரமான மீன்பிடி தொடர்பாக இக்கூட்டத்தில் எந்தவிதமான ஆராய்வுகளும், பேச்சுக்களும் மேற்கொள்ளப்படவில்லை. என்று அதன் பிரதிநிதிகளும், கலந்து கொண்ட மக்களும் குறைபட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் -அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.