யாழ். ஆவரங்காலில் மினிவான் – லொறி நேருக்குநேர் மோதி கோர விபத்து: 32 பேர் காயம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ஆவரங்கால் பகுதியில் பயணிகளை ஏற்றி வந்த மினிவானும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மினிவானும் யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சி நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் மினிவானில் 40 பேர் பயணித்தனர் எனவும் இதில் 32 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 3 சிறார்கள் உட்பட 11ஆண்களும், 21 பெண்களுமாக 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த விபத்தில் காயமடைந்த போதிலும் தெய்வாதீனமாக எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் வீதி விபத்தில் ஒருவர் பலி!
கிளிநொச்சியில் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை (12.09.2015) காலை கிளிநொச்சி பிரதான வீதியில் பொலிசாரால் மீட்க்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. வீதிவிபத்தில் சிக்கிய ஒருவரினது சடலம் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இரவு வேளையில் பயணித்த வாகனமொன்றினால் இவர் மோதிக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.