தீவகம் வேலணை சாட்டி பெருங்கடலில் அதிசய கடற்பாறையொன்று காணப்படுவதாக தெரிய வருகின்றது.செட்டிபுலம் காளவாய்த்துறை ஜயனார் கோவிலுக்கு கிழக்காகவும்-ஜிம்மா பள்ளிவாசலுக்கு தெற்குப்பக்கமாகவும்-கடலுக்குள் சுமார் 300 மீற்றர் தூரத்தில் இந்த அதிசய கடற்பாறை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாறையானது சுமார் 70 தொடக்கம் 90 அடி சுற்றளவினைக் கொண்டதாகவும்-நீரின் மட்டத்தோடு மேலெழுந்து காணப்படுவதாகவும்-இப்பாறையினை,இப்பகுதியைச் சேர்ந்த மக்கள்-செட்டியார் பாறை அல்லது செட்டியார் கல்லு என்று பெயர் குறிப்பட்டு அழைப்பதாகவும் தெரிய வருகின்றது.
இப்பாறை காணப்படும் பகுதியானது- முன்னைய காலத்தில்-நிலப்பகுதியாக இருந்ததாகவும்-இப்பகுதியில் மட்பானை செய்யும் குயவ தொழிலாளர்கள் வசித்து வந்ததாகவும்-மரபுவழிக்கதையொன்று உள்ளதாக இப்பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் கூறுகின்றனராம்.
ஒரு காலத்தில் ஏற்பட்ட கடற்கோளின் தாக்கத்தினால்-அல்லது கடல் அரிப்பினால் இப்பகுதி முழுமையாக கடல் நீரில் அமிழ்ந்து அழிவுற்று இருக்கலாம் என்றும்-இப்போதும் இக்கடற்பாறை அமைந்துள்ள பகுதியில் மண்பாண்டங்களின் எச்சங்கள் இருப்பதாகவும் -இப்பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலில் ஈடுபடும் பெரியவர்கள்- தெரிவிக்கின்றனராம்.
இப்பாறை அமைந்துள்ள பகுதியினை முழுமையாக ஆராட்சி செய்யும் பட்சத்தில் அதிசயிக்க தக்க பல ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
தகவல்-நிழற்படங்கள்-
திரு I. சிவநேசன்-வேலணை