பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் jacques audiard இயக்கிய “தீபன்” திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை (palme d’or) விருதினை வென்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாகநடித்திருக்கிறார்.அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது.
ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார்.
புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சினைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும்அலைக்கழிப்புக்களையும்,மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் “தீபன்” என்று பரவலாக பார்க்கப்படுகிறது.
கேன்ஸில் இத்திரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரி ஆகியோரின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
யாழ் தீவகத்தின் அல்லைப்பிட்டி என்னும் குக் கிராமத்தில் பிறந்தவரான, ஷோபாசக்தி அவர்கள்-நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளராவார்.அவர் கதாநாயகனாக நடித்த தீபன் திரைப்படம் பிரான்ஸின் அதியுயர் விருதினை பெற்றுக் கொண்டதனையிட்டு-அல்லையூர் இணையமும்,அல்லைப்பிட்டி மக்களும் பெரு மகிழ்ச்சியடைவதுடன்-அவருக்கும் அவர் சார்ந்த தீபன் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துக்களையும்-பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.