யாழ் தீவகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால்-மக்களும் கால்நடைகளும் குடிநீர் தேடி அலைய வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலணை,ஊர்காவற்றுறை,நெடுந்தீவு போன்ற தீவக பிரதேசசபைகளும் மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை முன்னெடுத்து வரும் நிலையில்- கால்நடைகளோ நீர் இன்றி அலைந்து வருகின்றன.தீவகத்தில் அமைந்துள்ள குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.கிணறுகளின் நீர் மட்டம் குறைந்து செல்வதுடன் தண்ணீரின் தரமும் மாறுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பொதுமக்களின் நிலை இருக்க-வறண்ட தரவை
நிலங்களில் நீர் தேடி அலையும் கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக-மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்திற்கு அருகில் மண்கும்பானைச் சேர்ந்த T.பரராசலிங்கம் ,K.கணேசையா ,T.சிவானந்தராசா ஆகிய மூவரும் இணைந்து ஒரு குடிநீர்த் தொட்டியினை அமைத்து -நீர்நிறைத்து கால்நடைகளின் தாகம் தீர்த்து வைத்துள்ளார்கள்-இவர்களை பின்பற்றி ஏனையவர்களும் நீர்த் தொட்டிகளை அமைக்க முன்வரவேண்டும் என்ற பணிவான வேண்டுகோளினை உங்கள் முன் வைக்கின்றோம்.
கண்காணிக்க வேண்டும்
கால்நடைகள் இறைச்சிக்காக கடத்தப்பட்டு வெட்டப்படுவது தீவகத்தில் ஆங்காங்கே நடப்பதனால்-குடிநீர்த் தொட்டிகளை நோக்கிவரும் கால்நடைகளை விஷமிகள் தடம்வைத்து இரவுவேளைகளில் பிடிப்பதற்கு முயலலாம்-எனவே பொதுமக்கள் நீர்த் தொட்டிகளை கண்காணிக்க முன் வர வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மன்னர்கள் குளம் வெட்டினார்கள்-அரண்மனைகள் கட்டினார்கள் என்பதெல்லாம் நாம் படித்து முடிந்த வரலாறு-ஆனால் நிகழ்காலத்தில் நாம் என்ன செய்தோம் -இந்தக் கேள்விக்கு எமது பெற்றோர்களின் பெயரின் ஒரு குடிநீர்த் தொட்டியினை அமைத்து புண்ணியத்தினைத் தேடிக் கொள்ளலாமல்லவா???
சிந்தியுங்கள்!
செயல்ப்படுங்கள்!
உள்ளத்தால் உதவிடுங்கள் உயர்ந்திடுங்கள்!